×

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கரு.முத்து கண்ணன் மறைவு ஒட்டுமொத்த தமிழ்ப் பேரினத்திற்குமான பேரிழப்பாகும்: சீமான்..!

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கரு.முத்து கண்ணனுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொழிற்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய பெருந்தகை ஐயா கருமுத்து தியாகராஜன் அவர்களின் மகனும், மதுரையில் புகழ்பெற்ற தியாகராஜர் கல்லூரிகள், தியாகராஜர் ஆலைகள் மற்றும் பல நிறுவனங்களின் தலைவரும், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்காரும், தமிழ்ப் பற்றாளருமான பெருமதிப்பிற்குரிய ஐயா கருமுத்து கண்ணன் மறைவுற்ற துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

இந்திய நாட்டின் விடுதலையில் மிகுந்த வேட்கை கொண்டிருந்தவரின் மகனாகப் பிறந்து, தந்தையின் நிறுவனங்களை ஏற்று, திறம்பட நடத்தி தொழிற்துறையில் கோலோச்சினாலும், மெய்யியல் மீது கொண்ட அளவற்ற ஈடுபாடு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் திருத்தொண்டு பலபுரிந்தும், ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்தும், கல்வித்தந்தையாக எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியும், மதுரை மக்களின் பேரன்பிற்கும், போற்றுதலுக்கும் உரிய மாண்பாளராகத் திகழ்ந்தவர்.

அன்னைத்தமிழின் மீது பெருங்காதலும், தமிழ்த்தேசியக் கருத்தியலில் மிகுந்த உறுதிப்பாடும் கொண்டிருந்த ஐயா கருமுத்து கண்ணன் அவர்களது மறைவு மதுரை மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ப்பேரினத்திற்குமான பேரிழப்பாகும். ஐயா கருமுத்து கண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். பெருந்தமிழர் ஐயா கருமுத்து கண்ணன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கரு.முத்து கண்ணன் மறைவு ஒட்டுமொத்த தமிழ்ப் பேரினத்திற்குமான பேரிழப்பாகும்: சீமான்..! appeared first on Dinakaran.

Tags : Dakar Karu ,Madurai Meenadashi Amman Temple ,Chennai ,Madurai Meenatchi Amman Temple ,Madurai ,Meenadashi Amman Temple ,Dakar Kagaru ,Muthu Kannan ,Seeman ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...