×

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். தொழிலதிபர் கரு.முத்து கண்ணன் மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராக 15 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலக் கோளாறு காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கர் கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கருமுத்து கண்ணன் மறைந்த செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தனது தந்தை காலத்தில் இருந்தே திமுக மீதும், எங்கள் குடும்பத்தின் மீதும் கருமுத்து கண்ணன் அன்பு கொண்டிருந்தவர். நான் எப்போது மதுரை சென்றாலும் பாசத்தோடு, இன்முகத்தோடும் வரவேற்பார். தியாகராசர் பொறியியல் கல்லூரி இயக்குநராக பணியாற்றி ஏழை மாணவர்கள் கல்வி முன்னேற்றத்துக்கு உதவி செய்தவர்.

2006-இல் கழக ஆட்சி அமைந்ததும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர்க் குழுத் தலைவராக கருமுத்து கண்ணன் அவர்கள் நியமிக்கப்பட்டார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் தக்காராகப் பல ஆண்டுகள் பணியாற்றி, கோயில் புனரமைப்புப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டு மதுரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மாநில திட்டக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் உருவாக்குவதில் துணை நின்றவர்.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் எனது தலைமையில் அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனைக்குழுவிலும் உறுப்பினராக இருந்து இந்து சமய அறநிலையத்துறைக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியவர். தொழில்துறை, கல்வித்துறை, கோயில் திருப்பணிகள் என அனைத்திலும் சிறந்து விளங்கி, பலருக்கும் உதவிகள் செய்த உயர்ந்த உள்ளம் கொண்ட கருமுத்து கண்ணன் அவர்களின் மறைவு பேரிழப்பு. அவரது மறைவினால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshi Amman Temple Trustee ,Karu Muthu Kannan ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Karu.Muthu Kannan ,Meenakshi Amman ,
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...