×

தாம்பரம் மாநகராட்சிக்கான புதிய அலுவலகம் அமையும் இடத்தை அமைச்சர் ஆய்வு

தாம்பரம், மே 21: தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, புதிதாக தாம்பரம் மாநகராட்சி தமிழகத்தின் 20வது மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சி மேயராக வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயராக கோ.காமராஜ், மண்டலகுழு தலைவர்களாக வே.கருணாநிதி, இ.ஜோசப் அண்ணாதுரை, ஜெயபிரதீப், டி.காமராஜ், எஸ்.இந்திரன், நியமன குழு உறுப்பினராக பெருங்களத்தூர் சேகர், கணக்கு குழு தலைவராக மதினாபேகம், பொதுசுகாதார குழு தலைவராக நரேஷ்கண்ணா, கல்விக்குழு தலைவராக கற்பகம் சுரேஷ், வரிவிதிப்பு மற்றும் நிதி குழு தலைவராக ரமணி ஆதிமூலம், நகரமைப்பு குழு தலைவராக நடராஜன், பணிகள் குழு தலைவராக சுந்தரி ஜெயக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

5 மண்டலங்கள், 70 வார்டுகள் கொண்ட தாம்பரம் மாநகராட்சிக்கு அலுவலக கட்டிடம் இல்லாததால், தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது மேற்கு தாம்பரம், முத்துரங்கமுதலி தெருவில் நகராட்சி அலுவலகமாக செயல்பட்டு வந்த அலுவலகம் தற்போது மாநகராட்சி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு போதுமான அறைகள் இல்லாததாலும், மாமன்ற கூட்டம் நடைபெறும் அறை சிறிய அளவில் உள்ளதாலும், பொதுமக்களுக்கு போதுமான இடம் மற்றும் கழிவறை வசதிகள் இல்லாததாலும், சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, தாம்பரம் மாநகராட்சிக்கு அனைத்து வசதிகளும் கொண்ட புதிய அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் என தொடர்ந்து பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை எழுந்தது.

இதனைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி அலுவலக கட்டிடத்திற்கு இடம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றது. அப்போது தாம்பரம், சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் தேசிய சித்த மருத்துவமனை அருகே மாநில சுகாதாரத்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் மாவட்ட அரசு மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டிருந்ததால், அந்த இடத்தை சுகாதாரத்துறை தர மறுத்துவிட்டது. இதனையடுத்து தாம்பரம், சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு நெஞ்சகநோய் மருத்துவமனை வளாகத்தில் வெளி நோயாளிகள் பிரிவு இயங்கிய இடத்தில் நான்கரை ஏக்கர் நிலம் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டு, அங்கு தாம்பரம் மாநகராட்சி அலுவலக கட்டிடம் கட்ட முடிவு செய்து ஆவணங்கள் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்
பட்டது.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மாநகராட்சி கட்டிடம் தொடர்பாக வடிவமைக்கப்பட்டுள்ள வரைப்படங்களை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது, மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, அமைச்சரிடம் இடம் தொடர்பாக விரிவான விளக்கத்தை அளித்தார்.
ஆய்வின்போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மாநகராட்சி ஆணையர் அழகு மீனா, மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், ஜெயபிரதீப், மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சுரேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனார்.

The post தாம்பரம் மாநகராட்சிக்கான புதிய அலுவலகம் அமையும் இடத்தை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Tambaram Corporation ,Tambaram ,Pallavaram ,Anakaputtur ,Pammel ,Sembakkam ,Perungalathur ,Birkankaranai ,Madambakkam ,Chitlapakkam ,Tiruneermalai ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...