×

பிசி, எம்பிசி மற்றும் எஸ்டி இனத்தவர்களுக்கு பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி

திருவாரூர், மே 20: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப்பினர் இனத்தை சார்ந்தவர்கள் பொருளாதார மேம்பாட்டு கடன் உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்திய கூறுள்ள சிறுதொழிகள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக்கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன், மற்றும் கறவைமாடுக் கடன் ஆகிய கடன் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருநபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொது காலகடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவிகிதம் முதல் 8 சதவிகிதம் வரை. பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவிகிதம். நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவிகிதம்.

இதற்கு மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்கவேண்டும். மகளிர் திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒருகுழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவிகிதம். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதிம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவிகிதம்.

மேற்கண்ட திட்டங்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரார்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல் ஆகியவைகளுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். எனவே, மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பிசி, எம்பிசி மற்றும் எஸ்டி இனத்தவர்களுக்கு பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி appeared first on Dinakaran.

Tags : BC ,MBC ,Tiruvarur ,Sirmarappin ,PC ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...