விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக ஊராம்பட்டி பட்டாசு ஆலை உரிமையாளர் கடற்கரை, போர்மென் காளியப்பன் ஆகியோரை கைது செய்துள்ளார். பட்டாசு ஆலை ஒப்பந்ததாரர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் ஏ. ஜே நகரை சேர்ந்த கடற்கரை என்பவருக்கு சொந்தமாக ஊராம் பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குள்ள 25க்கும் மேற்பட்ட அறைகளில், நூற்றுக்கணக்கான ஆண்- பெண் தொழிலாளர்கள் பல்வேறு பட்டாசு வகைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பூச்சட்டி மற்றும் தரை சக்கரம் போன்ற பட்டாசு ரகங்களுக்கு மருந்து செலுத்தும் அறையில் மூலப் பொருள்களில் வேதியியல் மாற்றம் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமாகி, அருகில் இருந்த மற்றொரு அறையும் சேதமானது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி குமரேசன், 35 சுந்தர்ராஜ், 27 அய்யம்மாள், 70, இருளாயி 45 ஆகிய 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகிய 2 ஆண் தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த அய்யம்மாள் முதலுதவி பெற்ற பின்பாக மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயமடைந்த இருளாயி சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த தொழிற்சாலையில் தீயணைப்பு படையினர், வருவாய் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிற்சாலை மேற்பார்வையாளர் பள்ளபட்டியைச் சேர்ந்த காளியப்பன்,40 என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த வழக்கில் இருவரை காவல்துறை கைது செய்தது.
The post விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த வழக்கில் இருவரை கைது செய்தது காவல்துறை appeared first on Dinakaran.
