×

சங்கராபுரத்தில் பரபரப்பு தொழிலாளி அடித்து கொலை? உறவினர்கள் சாலை மறியல்

சங்கராபுரம் மே 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமு மகன் துரை (45). இவர் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் காலணி தைக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சங்கராபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பின்புறம் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்தார்களா, அல்லது எப்படி இறந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டதாகவும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சங்கராபுரத்தில் பரபரப்பு தொழிலாளி அடித்து கொலை? உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,Sankarapuram ,Ramu Makan Durai ,Sankarapuram East Street, Kallakurichi District ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்