×

கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி விழுப்புரம் எஸ்.பி. சஸ்பெண்ட்: 2 டி.எஸ்.பி.க்கள் பணியிடை நீக்கம்; செங்கல்பட்டு எஸ்.பி. மாற்றம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

சென்னை: கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலியான விவகாரத்தில், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா, 2 மாவட்ட மதுவிலக்கு டிஎஸ்பிக்கள் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளர். செங்கல்பட்டு எஸ்பியும் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சனிக்கிழமை இரவு பலர் விஷச் சாராயம் அருந்தியுள்ளனர். அதை சாப்பிட்ட பலரும் மயங்கி விழுந்தனர். சிலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே விஷச் சாராயம் சாப்பிட்டவர்கள் உயிரிழந்தனர். மரக்காணத்தில் 13 பேரும், செய்யூரில் 5 பேரும் என இரு சம்பவத்தில் மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், புதுவையில் இருந்து கடத்தப்பட்டு வந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தல்காரர்களை கைது செய்தனர். இதனால் குறைந்த விலைக்கு மது கிடைக்காததால், எத்தனால் மற்றும் மெத்தனால் கலந்த எரிசாராயத்தை சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. எத்தனால் மற்றும் மெத்தனால் கலவை, தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தக் கூடியவை என்றும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், டிஐஜி பகலவன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது செய்யூர் மற்றும் மரக்காணம் இன்ஸ்பெக்டர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

இரு சம்பவத்திலும் 40க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்தவுடன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டார். இந்தநிலையில், நேற்று பிற்பகலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செட்டியார் குப்பத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்புகள் தொடர்பாகவும், சிகிச்சை பெற்று வருகிறவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். டாக்டர்களிடம், உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபிக்கள் டேவிட்சன் தேவாசீர்வாதம்(உளவுத்துறை), மகேஷ்குமார் அகர்வால்(மதுவிலக்கு அமலாக்கத்துறை), சங்கர்(சட்டம் மற்றும் ஒழுங்கு), வடக்கு மண்டல ஐஜி கண்ணன், டிஐஜி பகலவன், விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட காவல்துறையும் அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்க பிரிவும் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்தார். மேலும், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் இந்த பிரிவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் போன்ற ரசாயனங்கள் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக முதல்வர் அறிவுறுத்தினார். மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றும் காவலர்கள் தீவிர கவனத்துடனும் அக்கறையுடன் செயல்பட வேண்டும், அவ்வாறு இல்லாத காவலர்கள் மீது உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அதன்படி, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த முதல்வர், அதே சமயம் நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பிக்கள் பழனி, துரைபாண்டி ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம்(சஸ்பெண்ட்) செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றம் செய்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பிரச்சனையின் மூல காரணங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழித்திடுவதற்கு ஏதுவாகவும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சில மூலப்பொருட்கள் கள்ளச் சாராயம் தயாரிக்கப்படும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும் நோக்கத்துடனும், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் போன்ற ரசாயனங்கள் தவறாக பயன்படுத்துதலை மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும்
* மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் தீவிர கவனத்துடனும் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
* செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்
* கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது.

The post கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி விழுப்புரம் எஸ்.பி. சஸ்பெண்ட்: 2 டி.எஸ்.பி.க்கள் பணியிடை நீக்கம்; செங்கல்பட்டு எஸ்.பி. மாற்றம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Villupuram S.P. ,DSPs ,Chengalpattu S.P. ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Villupuram SP ,Srinatha ,2 District Prohibition ,
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்