×

கொல்லிமலை வனப்பகுதி கோயிலில் கிடா வெட்டி படையலிட்டு சிறப்பு பூஜை: ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்

சேந்தமங்கலம்: கொல்லிமலை அருகே வனப்பகுதியில் உள்ள கோயிலில், ஆண்கள் மட்டுமே சென்று கிடா வெட்டி படையலிட்டு சிறப்பு பூஜை செய்தனர். கொல்லிமலை ஒன்றியம், தின்னனூர் நாடு ஊராட்சியில் சேத்துபலாப்பட்டி, நரியன்கிணறுபட்டி, வாசலூர்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வாசலூர் பட்டி வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியண்ணன் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மட்டுமே வனத்துக்குள் சென்று, பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபாடு நடத்தி வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, வழிபாடு நடத்தவில்லை. நேற்று சித்ரா பவுர்ணமி என்பதால், ஏராளமான ஆண்கள் வனப்பகுதிக்குள் சென்று, பெரியண்ணன் சாமிக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர், பொங்கல் வைத்து, ஆட்டு கிடாக்களை வெட்டி படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தில், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் சென்று, பெரியண்ணன் சாமிக்கு பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபாடு செய்வது வழக்கம்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு சிறப்பாக செய்துள்ளோம். பொங்கல் வைத்து அதை உருண்டை பிடித்து, ஆட்டு இறைச்சிக்கு மசாலா தூள் களை பயன்படுத்தாமல், தண்ணீரில் இறைச்சியை போட்டு அதில் உப்பு, மஞ்சள், வெங்காயம், கருவேப்பிலை இவைகளை சேர்த்து குழம்பு தயாரித்து, சாமிக்கு படையல் போட்டு வழிபாடு நடத்துவோம். அனைவரும் இங்கேயே உணவருந்தி விட்டு இரவு வீட்டுக்கு சென்று விடுவோம்,’ என்றனர்.

The post கொல்லிமலை வனப்பகுதி கோயிலில் கிடா வெட்டி படையலிட்டு சிறப்பு பூஜை: ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர் appeared first on Dinakaran.

Tags : Kollimalai Forest Temple ,Senthamangalam ,Kollimalai ,
× RELATED சாரல் மழையையும் பொருட்படுத்தாமல்...