வேலூர், மே 5: வேலூரில் மண்டி வீதி, நேதாஜி மார்க்கெட்டில் நேற்று கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிட்டார். வேலூர் மண்டி வீதி வழியாக சித்ரா பவுர்ணமியையொட்டி புஷ்ப பல்லக்குகள் பவனி நேற்றிரவு நடந்தது. முன்னதாக நேற்று காலை கமிஷனர் ரத்தினசாமி மண்டி வீதியில் ஆய்வு செய்தார். அப்போது பல்லக்குகள் வந்து செல்ல செய்யப்பட்டு இருந்த ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இதையடுத்து நேதாஜி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்கறிகள் விற்பனை செய்யும் கடைக்கார்கள் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத வகையில் பாதை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர். உடனடியாக அக்கடைகளை அகற்றுமாறு கடையின் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார். காய்கறிகளை வாங்க பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் ஒவ்வொரு கடைக்காரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் தான் கடைகள் இருக்க வேண்டும். நடந்து செல்லும் பாதையில் கடைகளை வைக்க கூடாது என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நகர்நல அலுவலர் கணேஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
The post ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கமிஷனர் உத்தரவு மண்டி வீதி, நேதாஜி மார்க்கெட்டில் ஆய்வு appeared first on Dinakaran.