சென்னை: பூக்கடை காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியாற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பிராட்வே பகுதியில் மாநகர காவல்துறையின் பூக்கடை காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு நேற்று காலை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகளையும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரை அனைவரிடமும், ‘‘காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து, அவர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது, காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி அவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கினார். அப்போது காவலர்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதை தொடர்ந்து பூக்கடை காவலர்களுடன் டிஜிபி சைலேந்திர பாபு அமர்ந்து குழு புகைப்படை எடுத்துக் கொண்டார். டிஜிபியின் திடீர் ஆய்வால் பூக்கடை காவல் நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
The post பூக்கடை காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு: காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் appeared first on Dinakaran.