சென்னை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட 386 அவதூறு வீடியோக்களை நீக்க கோரி, யூடியூப் நிர்வாகத்திற்கு மாநில சைபர் க்ரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். மேலும், கூகுள் பிளேவில் இருந்த 221 சட்டவிரோத கடன் செயலிகளும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள், பதிவுகள், மோசடி நபர்களின் கடன் செயலிகளை மாநில சைபர் க்ரைம் பிரிவு கண்காணித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை அதாவது கடந்த 4 மாதங்களில் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த 40 சட்டவிரோத பதிவுகள் மற்றும் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களிடையே அவபெயரை உருவாக்கும் வகையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறித்து தவறான மற்றும் அவதூறாக கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்த 386 வீடியோக்களை நீக்கம் செய்ய மாநில சைபர் க்ரைம் போலீசார், யூடியூப் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதோடு இல்லாமல், ரிசர்வு வங்கி அனுமதியில்லாமல் கூகுள் பிளே ஸ்டோரில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சட்டவிரோதமான 221 கடன் செயலிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 61 சட்ட விரோத கடன் செயலிகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் குறித்த 386 அவதூறு வீடியோக்களை நீக்க யூடியூப் நிர்வாகத்திற்கு கடிதம்: கூகுள் பிளேவில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் நீக்கம் appeared first on Dinakaran.