×

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிமன்றங்கள்: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார்

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிமன்றங்களை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா நேற்று திறந்து வைத்தார். சென்னை, எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காசோலை மோசடி வழக்குகளுக்கான இரண்டு கூடுதல் நீதிமன்றங்கள், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குகளுக்கான ஒரு கூடுதல் நீதிமன்றம், சிறிய வழக்குகளுக்காக மெய்நிகர் முறையிலான ஒரு நடமாடும் நீதிமன்றம், ரயில்வே சட்ட வழக்குகளுக்கான ஒரு நடமாடும் நீதிமன்றம் ஆகியவற்றை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணன் ராமசாமி, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, டி.பரத சக்ரவர்த்தி, மாவட்ட முதன்மை எஸ்.அல்லி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், எழும்பூர் வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தன்பாபு, செயலாளர் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர் ரகுபதி பேசுகையில், ‘‘ரூ.1747 கோடி நீதித்துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டை விட இது ரூ.285 கோடி அதிகம், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க நீதித்துறை கோரிக்கைகளை நிறைவேற்றும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்’’ என்றார்.

உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி பேசுகையில், ‘‘நாட்டிலேயே தமிழ்நாடு உள்பட மூன்று மாநிலங்களில் மட்டும் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் எண்ணிக்கையை விட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு. அதற்கு குற்றவியல் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள் முக்கிய காரணமாக உள்ளது’’ என்றார்.உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பேசுகையில், ‘‘எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் முன்பிருந்த சூழ்நிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார். உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பேசும்போது, ‘‘கூடுதல் நீதிமன்றங்களை உருவாக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்படும் போதெல்லாம், தமிழக அரசு மனப்பூர்வமாக ஏற்று உரிய வசதிகளை செய்து கொடுக்கிறது.

வழக்குகள் அதிகரிக்க மக்கள் தொகை பெருக்கம் மட்டும் காரணமல்ல. பிரச்னைகளும் புதிது புதிதாக உருவாவது தான் மக்கள் மத்தியில் தார்மீக புரிதல்கள் குறைந்ததே வழக்குகள் அதிகரிக்க காரணம்’’ என்று கூறினார்.பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா சிறப்புரையாற்றுகையில், ‘‘மெய்நிகர் நடமாடும் நீதிமன்றம் மூலம் வழக்குகளில் ஆஜராக நீதிமன்றம் வர தேவையில்லை. தகவல் தொழில்நுட்ப துறையின் புரட்சிதான் காகிதமில்லா நீதி பரிபாலனத்துக்கு கொண்டு வந்துள்ளது. மின்னணு மனு தாக்கல் நடைமுறையில் தொடங்கி காணொலியில் வழக்குகளை விசாரிக்கும் நடைமுறை வரை தொழில் நுட்பமே காரணம். இளம் வழக்கறிஞர்கள் வாதங்களை சுருக்கமாகவும், விரைவாகவும் முன்வைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

The post சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிமன்றங்கள்: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Elumpur Court ,iCourt Responsibility ,D.C. ,Chief Justice ,High ,Court ,D.C. Raja ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்