×

திருவள்ளூர் அருகே பரிதாபம்; விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி வாலிபர் பலி: தேடிச்சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வலசை வெட்டிக்காடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன் (37). இவர் வெல்டிங் வேலை செய்தார். இவரின் மனைவி நித்யா. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். நேற்றிரவு 9.30 மணியளவில் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றுவருவதாக கூறிவிட்டு சென்ற தனசேகரன் பல மணி நேரம் ஆன பிறகும் வீட்டுக்கு வராததால் நித்யா, அவரது தங்கை அமலா ஆகியோர் தேடி சென்றுள்ளனர். அங்கு தாமோதரன் என்பவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலி அருகே தனசேகரன் இறந்துகிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கதறி அழுதனர். அந்த சமயத்தில் ஏதேச்சையாக அமலாவின் கை அங்குள்ள வேலியில் பட்டபோது ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டார். இதனால் மின்சாரம் பாய்ந்து தனசேகரன் இறந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவல்படி, மணவாளநகர் போலீசார் சென்று விசாரித்தபோது விவசாயி தாமோதரனுக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தில் வேர்க்கடலை, மிளகாய் பயிரிட்டுள்ளனர். காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க அனுமதி பெறாமல் மின் வேலி அமைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷாக் அடித்து காயம் அடைந்த அமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நித்யா கொடுத்துள்ள புகாரின்படி, மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவள்ளூர் அருகே பரிதாபம்; விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி வாலிபர் பலி: தேடிச்சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thanasekaran ,Velasa Vettikadu Pillayar Temple Street, ,Thiruvallur District ,Kadampatur ,Union ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்