×

சூடானில் ராணுவ மோதலில் பலி எண்ணிக்கை 270ஆக அதிகரிப்பு

கார்டோம்: சூடானில் ராணுவ மோதலில் பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 5வது நாளாக நேற்றும் சண்டை நீடித்தது. தலைநகர் கார்டோம் மற்றும் ஓம்டர்மேன் நகரங்களில் துப்பாக்கி சூடு, பீரங்கி தாக்குதல்கள் மற்றும் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டன. ராணுவ தலைமையகம் மற்றும் சர்வதேச விமான நிலையம் அருகிலும் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. செவ்வாய் கிழமை முதல் புதன் கிழமை சூரிய அஸ்தமனம் வரை 24 மணி நேர போர் நிறுத்தம் அமலில் இருக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இரு ஜெனரல்களிடம் பேசியதை அடுத்து போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். எனினும் அவர்கள் அவற்றை கடைப்பிடிக்க தவறியுள்ளனர். தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரமாக வீடுகளில் முடங்கி இருந்த சூடான் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத்தொடங்கியுள்ளனர். பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் தங்களது உடமைகளுடன் நடந்தும் வாகனங்களிலும் நகரங்கை விட்டு வெளியேறத்தொடங்கி உள்ளனர். இந்நிலையில் ராணுவ மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270ஆக அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

  • இந்தியர்கள் பாதுகாப்பு
    சூடானில் தற்போது நிலைமை மிகவும் பதற்றமாக காணப்படுகின்றது. இந்நிலையில் சூடானில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் இந்தியா நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்களும் ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளனர்.

The post சூடானில் ராணுவ மோதலில் பலி எண்ணிக்கை 270ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Sudan ,Khartoum ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...