×

வாடிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

வாடிப்பட்டி, ஏப். 18: வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி ஊராட்சியில் இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாடிப்பட்டி ஒன்றியம் செம்மினிப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது காமராஜர் காலனி. சுமார் 120 குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதிக்கு கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் அடிக்கடி முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் நேற்று செம்மினிப்பட்டியிலிருந்து வாடிப்பட்டி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாடிப்பட்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகள் வராமல் கலைந்து செல்ல மறுத்த அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் இரண்டு தினங்களில் குடிநீர் விநியோகம் சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post வாடிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Vadipatti ,Semminipatti ,
× RELATED சமயநல்லூர் அருகே வாலிபர் வெட்டி கொலை