×

ரப்பானியா அரபு கல்லூரியில் கட்டப்பட்டு வரும் மசூதியை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சோழிங்கநல்லூர்: புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள ரப்பானியா அரபு கல்லூரியில் கட்டப்பட்டு வரும் மசூதியை அகற்றக் கோரிய வழக்கை, ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும், இந்து முன்னேற்ற கழக தலைவருமான கோபிநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் ரப்பானியா அரபு கல்லூரியில் மாநகராட்சியின் அனுமதியின்றி மசூதி கட்டப்பட்டு வருகிறது. அரபி கல்லூரியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் 400 ஆண்டு பழமையான சிவன் கோயில் உள்ளது.

ஒரு மத வழிபாட்டு தலத்துக்கு அருகில் மற்றொரு மத வழிபாட்டு தலம் கட்டுவதை தடை செய்ய வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி வேணுகோபால் பரிந்துரைத்துள்ளார். எனவே, இந்த கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மசூதி கட்டுமானங்களை அகற்ற வேண்டும், என கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகி, கல்லூரி வளாகத்தில் வழிபாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் மசூதி கட்டப்படுகிறது.

திருப்பூரை அடிப்படையாக கொண்ட மனுதாரர் சென்னையில் மசூதி கட்டப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதில் வேறு உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. எனவே, இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுபோன்ற வழக்குகள் தொடர மனுதாரருக்கு தடைவிதிக்க வேண்டும், என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு பொது நல நோக்குடன் தொடரப்படவில்லை எனவே, இந்த வழக்கை ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்கிறோம், என்று உத்தரவிட்டனர்.

The post ரப்பானியா அரபு கல்லூரியில் கட்டப்பட்டு வரும் மசூதியை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Rabbania Arab College ,Chozhinganallur ,Rabbania Arabic College ,Purasaivakkam, Perambur Barracks Road ,
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...