வத்திராயிருப்பு, ஏப்.14: தினகரன் செய்தி எதிரொலியால் விராக சமுத்திரம் கண்மாய் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தடுக்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லக்கூடிய வழியில் பெரியகுளம் விராக சமுத்திரம் கண்மாய் உள்ளது. இதன் கரையின் வழியே கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், அத்திக்கோவில், நெடுங்குளம், பிளவக்கல் அணை உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன. இந்த கரையின் இருபுறமும் தடுப்புகள் இல்லாமல் இருந்தது.
இதனால் வாகனங்கள் ஒன்றையொன்று விலகிச் செல்லும்போது தடுமாறினால் 30 அடிக்கு மேல் உள்ள கண்மாயில் உருண்டு விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. எனவே கண்மாய் கரைகளை பலப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என தினகரனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வௌியானது. இதன் எதிரொலியாக தற்போது கண்மாய் கரையில் உள்ள சாலையின் இரண்டு பக்கமும் தடுப்புக்கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்கள் தடுமாறி கண்மாய்களுக்குள் விழுவது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும், கண்மாய் கரைகளில் முழுமையாக தடுப்புக்கம்பி அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கூமாப்பட்டி செல்லும் வழியில் கண்மாய் சாலையில் தடுப்புக்கம்பி அமைப்பு: வாகன ஓட்டிகள் நிம்மதி appeared first on Dinakaran.