×

கோத்தகிரியில் பெண் தவறவிட்ட பணப்பையை போலீசில் ஒப்படைத்த சிறுவர்கள்

ஊட்டி, ஏப். 13: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் தேவன் (13), முருகேஷ் என்பவரது மகன் சரண்(10). இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த 10ம் தேதியன்று மாலை கடைவீதி வழியாக சென்று கொண்டிருக்கும்போது அங்கு சாலையில் பணப்பை கீழே கிடந்ததை பார்த்துள்ளனர். அதனை எடுத்து பார்த்தபோது, அதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்தது. சிறுவர்கள் இருவரும் நேராக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அந்த பணப்பையை உதவி ஆய்வாளர் யாதவ கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

அவர், அதை சோதனை செய்தபோது அதில் ரூ.1500 பணம், இலங்கை நாட்டின் விசா, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்டவை இருப்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை மேற்கொண்டதில் அந்த பணப்பை கடைவீதி பகுதியை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கு சொந்தமானதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பணப்பையில் இருந்த முகவரியை வைத்து சம்பந்தபட்டவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர் அங்கு வந்தார். உதவி ஆய்வாளர் யாதவ கிருஷ்ணன், பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவர்கள் முன்னிலையில் அந்தப் பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்து சிறுவர்களை பாராட்டினர்.

The post கோத்தகிரியில் பெண் தவறவிட்ட பணப்பையை போலீசில் ஒப்படைத்த சிறுவர்கள் appeared first on Dinakaran.

Tags : Kotakiri ,Prabhakaran ,Gothagiri district, ,Nilgiri district ,God ,Murukesh ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை