×

.டூவீலர் மீது காட்டெருது மோதி திமுக பிரமுகர் சாவு

அரூர்: அரூர் அருகே டூவீலர் மீது காட்டெருது மோதியதில், திமுக பிரமுகர் உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோட்டப்பட்டி அருகே சேலூர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன்(38). கூலி தொழிலாளியான இவர், கடந்த 7ம் தேதி இரவு மகன் தீபக்குடன்(12) தும்பல் பகுதி நோக்கி டூவீலரில் சென்று கொணடிருந்தார். சேலூர் அம்மாபாளையம் பிரிவு சாலை காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையை கடக்க முயன்ற காட்டெருது ஒன்று, டூவீலர் மீது பயங்கரமாக மோதி விட்டு சென்றது. இதில், வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட தந்தை-மகன் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாதையன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தீபக்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாதையன் மனைவி கவிதா கொடுத்த புகாரின்பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாதையன் திமுக கிளை செயலாளராக இருந்தார். இதுகுறித்து தகவலறிந்த மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் உள்ளிட்ட திமுகவினர் நேரில் சென்று, மாதையன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அளித்தனர்.

The post .டூவீலர் மீது காட்டெருது மோதி திமுக பிரமுகர் சாவு appeared first on Dinakaran.

Tags : DMK ,Aroor ,Papriprettipatti ,Selur ,Kottapatti ,Dinakaran ,
× RELATED நாய் கடித்து மான் சாவு