புதுடெல்லி: கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ப்பிக்க காலஅவகாசம் நாளை இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு கடந்த 2022-23ம் கல்வியாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. இந்த ஆண்டுக்கான இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான கியூட் தேர்வுக்கு பிப்ரவரி மாதம் முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியது.
மார்ச் 12ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டு பின்னர் மார்ச் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மார்ச் 30ம் தேதி வரை இளங்கலை படிப்புகளுக்கான கியூட் நுழைவுத் தேர்வுக்கு 14 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், “ஏராளமான மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று இளங்கலை கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று(நேற்று) காலை முதல் நாளை இரவு 11.59 மணி வரை மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் எதுவும் கிடையாது” என பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான பொது நுழைவுத் தேர்வு மே மாதம் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கியூட் நுழைவுத் தேர்வுக்கான காலஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு: பல்லைக்கழக மானியக் குழு அறிவிப்பு, பாடத்திட்டத்தில் மாற்றமில்லை appeared first on Dinakaran.