நாமக்கல், ஏப்.9: நாமக்கல் மோகனூர் ரோடு கொண்டிசெட்டிப்பட்டியில், நகராட்சிக்கு சொந்தமான ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 17.5 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. கடந்தாண்டு பருவமழையின் போது, இந்த ஏரி 2 முறை முழுமையாக நிரம்பியது. ஏரி பராமரிப்பு பணி தனியாருக்கு நகராட்சி டெண்டர் கொடுத்துள்ளது. இந்த ஏரியை சுற்றிலும், நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் பூங்காவும் உள்ளது. இந்த ஏரியில் கெண்டை, கெளுத்தி, கட்லா போன்ற மீன்கள் வளர்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஏரியில் வளர்க்கப்பட்டு வரும் மீன்கள் இறந்து மிதந்தது. கழிவுநீர் ஏரிக்குள் புகுந்ததால் மீன்கள் செத்து மிதந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து நகராட்சி தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, 38வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள், ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், உடனடியாக ஏரியில் செத்து மிதந்த மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டது. செத்த மீன்களால் மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படாமல் தடுக்க, ஏரியில் இருந்து தொலை தூரத்தில் குழிதோண்டப்பட்டு மீன்கள் புதைக்கப்பட்டன. மேலும், ஏரியில் உள்ள மற்ற மீன்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி ஏரியில் மீனவர்கள் மூலம் படகில் சென்று, தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என நகர்மன்ற துணை தலைவர் பூபதி தெரிவித்தார்.
The post கொண்டிசெட்டிப்பட்டி ஏரியில்
செத்து மிதந்த மீன்கள் appeared first on Dinakaran.