×

சிப்காட் வளாகத்திற்கு ரயில்வே தண்டவாளம்

ஈரோடு: சரக்குகளை  ஏற்றி இறக்க வசதியாக ஈங்கூர் ரயில் நிலையத்தில் இருந்து பெருந்துறை  சிப்காட் வளாகத்திற்கு தண்டவாளம் அமைக்க வேண்டும் என்று தொழில்துறையினர்  வலியுறுத்தி உள்ளனர். பெருந்துறை அடுத்துள்ள சிப்காட் வளாகத்தில்  ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில்  உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கொச்சி துறைமுகத்தில் இருந்து கப்பல்கள்  மூலமும், ஈரோடு ரயில்நிலையம் மூலமும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி  வைக்கப்பட்டு வருகின்றது.  ஈங்கூர் ரயில் நிலையத்தில் இருந்து சிப்காட்டிற்கு  சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் விரிவாக்கம் செய்தால் சரக்கு  ரயில்கள் எளிதில் சிப்காட் வளாகத்திற்குள்ளாகவே வந்து சரக்குகளை ஏற்றி  இறக்கி செல்ல முடியும்.

இக்கோரிக்கையை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்று  கடந்த பல ஆண்டுகளாக தொழில்துறையினர் ஒன்றிய அரசிடமும், ரயில்வே  நிர்வாகத்திடமும் வலியுறுத்தி வருகின்றனர்.  ஆனால் ஒன்றிய அரசும், ரயில்வே  நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளதால் சிப்காட் வளாகத்தில் இருந்து லாரிகளில்  சரக்குகளை ஏற்றிக்கொண்டு 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரோடு  ரயில்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அனுப்ப வேண்டிய நிலை  இருந்து வருகின்றது. இதனால் போக்குவரத்து செலவு மற்றும் வாகன நெரிசல்கள்  ஏற்படுகின்றது.

இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது: பெருந்துறை  சிப்காட் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் சரக்கு பெட்டகங்களை  ரயில்களில் ஏற்றி இறக்க வசதியாக ஈங்கூர் ரயில்நிலையத்தில் இருந்து 3 கிலோ  மீட்டர் தூரம் தண்டவாளம் அமைத்தால் சிப்காட் வளாகத்திற்குள்ளேயே சரக்கு  முனையம் ஏற்படுத்த முடியும்.  இது தொடர்பாக பல ஆண்டுகளாக வலியுறுத்தியும்  ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற முன்வராமல் உள்ளது. இதனால் சரக்குகள் மீதான  போக்குவரத்து செலவுதான் அதிகரித்து வருகின்றது. குறைந்தபட்சம் ஈங்கூர்  ரயில்நிலையத்தை விரிவாக்கம் செய்து அனைத்து சரக்கு ரயில்களும் நின்று  செல்லும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இத்திட்டம்  நிறைவேற்றப்பட்டால் ஈரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக  குறையும். இவ்வாறு கூறினர்.

Tags : Schiphol ,
× RELATED கோபியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை