முத்துப்பேட்டை: திருவாரூர் புத்தக திருவிழாவில் பங்கேற் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி வளர்ச்சிக் குழு கூட்டம் நேற்று பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் இளம்பரிதி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி குறித்து தலைமை ஆசிரியர் முருகேசன் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் வருகிற 25ம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவிற்கு அதிக மாணவர்களை அழைத்து செல்வது என்றும் ஆண்டு விழா மற்றும் ஓய்வுபெறும் கணித பட்டதாரி ஆசிரியருக்குப் பாராட்டு விழா நடத்துவது எனவும் நமக்கு நாமே திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தகர செட்டிற்கு வெப்பம் தாக்கா தகடு மற்றும் தள்ளு கதவு அமைத்து தர ஊராட்சி ஒன்றிய ஆணையரை அணுகுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆசிரியர்கள் துரைராசு, உமாராணி, அன்புச்செல்வி ஆகியோர் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து பேசினர். முன்னதாக ஆசிரியர் முருகையன் வரவேற்று பேசினார். முடிவில் ஆசிரியர் அருளானந்தம் நன்றி கூறினார்.