கண்ணமங்கலம்: படவேடு மாடு விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. விழாவில், ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். படவேடு அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில், காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி 4ம் ஆண்டு மாடு விடும் திருவிழா அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நேற்று நடந்தது. முன்னதாக, காலையில் கிராம தேவதை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அப்போது, கிராம பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பின்னர், பேண்டு வாத்தியங்கள், வாணவேடிக்கைகள் முழங்க பரிசு பொருட்களுடன் இளைஞர்கள் வாடிவாசலை வந்தடைந்தனர். தொடர்ந்து, வீதியில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. முடிவில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடிய காளைகளுக்கு முதல் பரிசாக 150 சிசி பைக், 2ம் பரிசாக 100 சிசி பைக், 3ம் பரிசாக மொபெட் உள்ளிட்ட 55 பரிசுகள் வழங்கப்பட்டன.