சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 1வது நிலையில் உள்ள 1வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதேபோல, 2வது நிலையில் உள்ள 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இரண்டு அலகுகளிலும் பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
