×

ஊட்டி, பெர்ன்ஹில் ரயில்வே குடியிருப்பு பகுதியில் காட்டுமாட்டிற்கு வனத்துறை சிகிச்சை

ஊட்டி, செப். 13:  ஊட்டி  அருகே பெர்ன்ஹில் ரயில்வே குடியிருப்பு வளாகத்தில் நடக்க முடியாமல் படுத்திருந்த காட்டுமாட்டிற்கு வனத்துறையினர் சிகிச்சை  அளித்து வருகின்றனர்.
நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட ஊட்டி, குன்னூர்,  கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை  கணிசமாக அதிகரித்துள்ளது. பகல்நேரங்களிலேயே கூட்டம் கூட்டமாக சாலையோரங்கள்,  தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டிருப்பதை பார்க்க முடியும்.  இந்நிலையில் ஊட்டி தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெர்ன்ஹில் ரயில்வே  குடியிருப்பு வளாகத்தில் காட்டுமாடு ஒன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு எழுந்து  நடக்க முடியாமல் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.  இத்தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் காட்டுமாட்டை  பார்வையிட்டனர். இதில் பெண் காட்டுமாடு என்பதும், வயது மூப்பின் காரணமாக  உடல் பலவீனமடைந்து படுத்திருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஊட்டி  அரசு கால்நடை மருத்துவர் ராஜமுரளி வரவழைக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட  காட்டுமாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் உடல்நிலையை வனத்துறையினர்  தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உடல் நிலை தேறியவுடன் வனத்திற்குள்  விடப்படும் எனவும் தெரிவித்தனர்.

Tags : Forest Department ,Ooty ,Bernhill ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...