×

அரிசி மூட்டைகளுடன் லாரி கவிழ்ந்து விபத்து

நாமக்கல், ஆக.26: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த புதுசத்திரம் பிரிவு சாலையில், திருவண்ணாமலையில் இருந்து கோழித்தீவனத்திற்கு பயன்படுத்தப்படும் குருணை அரிசி மூட்டைகள் 6 டன்னுடன், சரக்கு லாரி ஒன்று நேற்று நாமக்கல்லை நோக்கி சென்று கொண்டு இருந்தது. லாரியை புதுசத்திரத்தை சேர்ந்த துரைசாமி மகன் கோகுல் (27) என்பவர் ஓட்டி வந்தார். ராசிபுரத்தை அடுத்த புதுசத்திரம் பிரிவு சாலை அருகே, நேற்று காலை வந்த போது லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனையடுத்து சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி, சரக்கு மூட்டைகளுடன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் டிரைவர் கோகுல், சிறு காயத்துடன் உயிர்தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த புதுசத்திரம் போலீசார், விரைந்து கவிழ்ந்த லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை வேறு ஒரு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர், கவிழ்ந்த லாரியை மீட்பு வாகனம் மூலம் மீட்டு மாற்று இடத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடம் பிரிவு ரோடு என்பதால், அதிகமான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் சாலையின் நடுவே சரக்கு லாரி கவிழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Lorry ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது