ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தயாளன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் பகுதியில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், அதனை விற்பனை செய்யும் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவை சரியாக கடைபிடித்து, நுகர்வோருக்கு தரமான காய்கறிகள், பழங்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற கன்னிவாடி எம்.எஸ்.சுவாமிநாதன் குழும உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திலிருந்து பூச்சிக்கொல்லி தடுப்பு தொழில்நுட்ப வல்லுநர் ரஞ்சித் பூச்சிகள், அதனை கட்டுப்படுத்தும் மருந்துகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் மண்டி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.