×

பாலக்கோடு அருகே கோயிலில் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது

தர்மபுரி, ஜூன் 2: தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சக்கிலிநத்தம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 18ம் தேதி அதிகாலை அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கத்தாலி, 200 கிராம் வெள்ளி பொருட்கள், குத்துவிளக்கு, ஐம்பொன்னால் ஆன அம்மன் கரகம், ஐம்பொன்னால் ஆன அரை அடி அம்மன் சிலை மற்றும் கோயில் உண்டியல் கொள்ளை போனது. இதுகுறித்து கோயில் பூசாரி செல்வம் (52). மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாரண்டஅள்ளி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, டூவீலரில் வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதில், மாரியம்மன் கோயிலில் கொள்ளையடித்தது இவர்கள் தான் என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சக்கிலிநத்தத்தைச் சேர்ந்த வரதராஜ் மகன் சதீஸ் (22), பாலக்கோடு தண்டுகாரனஅள்ளி பகுதியை சேர்ந்த சக்தி மகன் டிப்ளமோ பட்டதாரி சூர்யா (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 பவுன் அம்மன் தங்க தாலி, வெள்ளிபொருட்கள், அரை அடி சாமிசிலை, உண்டியல் பணம் ₹8ஆயிரம், 2 குத்துவிளக்கை பறிமுதல் செய்தனர்.
இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Balakod ,
× RELATED பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி மக்னா யானை பலி