ஈரோடு, மே 25: ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பால சாலையை மேம்படுத்த அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், விரைவில் பணிகள் நடைபெற உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஈரோடு காளைமாடு சிலை சந்திப்பில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த சாலை நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். இந்த நுழைவு பாலத்தின் கீழ் உள்ள சாலை குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மேலும், மழை பெய்யும் போது சாலையின் குழிகளில் மழை நீா் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளுக்கு குழிகள் தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். பீக் அவர்ஸ் எனப்படும் காலை, மாலை நேரங்களில் இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், இந்த சாலையை சீரமைத்து, தற்போது அதிகரித்துள்ள வாகன போக்குவரத்திற்கு ஏற்ப விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்ற அரசு, சாலையை மேம்படுத்துவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன்பேரில், கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பால சாலையை மேம்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் சாலையை மேம்படுத்தவும், விரிவாக்க பணிகளை மேற்கொள்ளவும் அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும். பணிகள் தொடங்கும்போது, கட்டாயம் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். இலகு ரக வாகனங்கள், டூவீலர்கள் செல்வதற்கு வழிவகை செய்ய ஆலோசித்து வருகிறோம். கனரக வாகனங்கள் மாற்று வழி பாதையில் செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். சாலை மேம்பாட்டு பணிகள் துவங்கியதும், அதில் இருந்து 60 நாட்களுக்குள் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.