மதுரை, ஏப். 12: மதுரை நரிமேடு மீனாம்பாள்புரத்தை சேர்ந்த தாரணி தலைமையில் பாரா மெடிக்கல் டெக்னீசியன்கள் கலெக்டர் அனீஷ்சேகரிடம் நேற்று மனு அளித்தார். அதில், ‘தமிழகத்தில் கொரோனா 2ம் அலை காலக்கட்டத்தில், மதுரை அரசு மருத்துவமனைகளில் பாரா மெடிக்கல் 68 டெக்னீசியன்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் கடந்த மார்ச் 31ம் தேதியன்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் பொருளாதார நெருக்கடியில், வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். கொரோனா காலக்கட்டத்தில் எங்கள் உயிரை பணயம் வைத்து, மருத்துவ சேவை செய்து வந்தோம். மீண்டும் எங்களை கருணை அடிப்படையில் நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும். தமிழகத்திலுள்ள அனைத்து மருந்துவமனைகளிலும், கிராமப்புற மருத்துவமனைகளிலும், நகர்ப்புற மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளிலும் உள்ள பாரா மெடிக்கல் டெக்னீசியன் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என கூறியிருந்தனர்.