ஈரோடு, மார்ச் 26: ஈரோடு பெரிய மாரியம்மன்கோயில் திருவிழாவினையொட்டி ஜவுளி வியாபாரிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஈரோடு அப்துல்கனி ஜவுளி மார்க்கெட் தினசரி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் திருவிழாவினையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா தொடங்கி உள்ளதையடுத்து 28ம் ஆண்டாக நேற்று வியாபாரிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஜவுளி மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தினசரி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், நூர்சேட் ஆகியோர் தலைமை தாங்கினர். செயலாளர் சேகர், பொருளாளர் சபரிதனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக பகுதி செயலாளர் பெரியார்நகர் மனோகரன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை தொடங்கி வைத்தார். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.