ஈரோடு, மார்ச் 3: ஈரோடு மாவட்டத்தில் வரும் 5ம் தேதி என்எம்எம்எஸ் தேர்வு 24 மையங்களில் நடைபெற உள்ளது. ஒன்றிய அரசு சார்பில் ஆண்டு தோறும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக தேசிய வருவாய் வழி திறன் படிப்பு தொகை திட்ட தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படும். இத்தேர்வில் மாவட்ட அளவில் தகுதி பெறும் 250 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு 12ம் வகுப்பு படிக்கும் வரை அதாவது 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு வரும் 5 தேதி ஈரோடு மாவட்டத்தில் 24 மையங்களில் நடக்கிறது.
தேர்வினை நடப்பாண்டில் 8ம் வகுப்பு படிக்கும் 4,825 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். தேர்வானது மன திறன், படிப்புத்திறனை அடிப்படையாக கொண்டும், சமூக அறிவியல், அறிவியல், கணிதம் போன்ற பாடப்பகுதியில் இருந்து 90 மதிப்பெண்களுக்கு வினாக்களுக்கு நடக்கும். தேர்வு காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1 மணிக்கு நிறைவு பெற உள்ளது. இத்தேர்வுக்கான வினாத்தாள்கள் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.