ஊட்டி,மார்ச்1: கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், தொட்டபெட்டாவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா,படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்வது வழக்கம்.மேற்கு தொடர்ச்சி மலைகளும், கிழக்கு தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாக தொட்டபெட்டா காட்சிமுனை அமைந்துள்ளது. வரலாற்று புத்தகங்களில், இது குறித்து படிக்கும் மாணவர்கள் இந்த இடத்தை காண்பதற்காக அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்கின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த மழையின் போது, தொட்டபெட்டாவிற்கு செல்லும் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சிறு பாலம் ஒன்று பழுதடைந்தது. இதனால், தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழுதடைந்த இடத்தில் புதிதாக சிறிய பாலம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டது.
தற்போது பாலம் கட்டும் பணிகள் முடிந்துள்ளது. ஆனாலும், தொட்டபெட்டாவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல இதுவரை அனுமதிக்கப்படாமல் உள்ளது. இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடனே திரும்புகின்றனர். தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், இனி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிகை முற்றுகையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டாவை கண்டு ரசிக்கும் வகையில், இங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்