×

சேலத்தின் மிகச்சிறியதான நரசிங்கபுரம் நகராட்சியில் தலைவர் பதவி யாருக்கு?

ஆத்தூர், பிப்.17: சேலம் மாவட்டத்தின் மிகச்சிறிய நகராட்சியான நரசிங்கபுரத்தில் தலைவர் பதவியை பிடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் பரவலாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்த நரசிங்கபுரம் கடந்த 2001ம் ஆண்டு 3ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து  சக்கரவர்த்தி, ஆண்டவர், ஸ்ரீராம், காட்டுராஜா உள்ளிட்டோர் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். 2011ல் தேர்வு செய்யப்பட்ட தலைவரின் பதவிக்காலம் 2016ம் ஆண்டோடு முடிந்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி  தேர்தல் தடைபட்டது. இந்தநிலையில் 10ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி நிற்கிறது நரசிங்கபுரம் நகராட்சி.

சேலம் மாவட்டத்தின் மிகச்சிறிய நகராட்சியான நரசிங்கபுரம் 18 வார்டுகளை கொண்டது. தற்போது இந்த நகராட்சி தலைவர் பதவி எஸ்.சி.,பொது பிரிவினருக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு திமுக கூட்டணி, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, மநீம, நாதக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சுயேட்சைகள் உள்ளிட்ட 72பேர் களத்தில் உள்ளனர். ஆண்கள் 22,403பேர், பெண்கள்10,701பேர், இதரர் 11 பேர் என்று மொத்தம் 33,115 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வாக்குகளை பெற்று வார்டு கவுன்சிலர்களாக வலம் வரப்போகிறவர்கள் யார்? அவர்கள் தேர்வு செய்யப்போகும் தலைவர், துணைத்தலைவர் யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.
இது குறித்து நரசிங்கபுரம் நகராட்சி பொதுமக்கள் கூறியதாவது:

பேரூராட்சியாக இருந்தபோது எப்படி இருந்தோ, அப்படியே இன்றும் இருக்கிறது நரசிங்கபுரம் நகராட்சி. ஆத்தூர் நகராட்சியை ஒட்டியிருப்பதும் இதற்கு முக்கிய காரணம். ஆத்தூர் நகராட்சி பகுதியில் இருந்த பெரும்பாலான அரசுத்துறை அலுவலகங்கள்  மற்றும் குடியிருப்புகள் அதிக அளவில் நரசிங்கபுரம் நகராட்சி பகுதிக்கு மாறியுள்ளது. நரசிங்கபுரம் நகராட்சியின் மேற்கு பகுதியான செல்லியம்பாளையத்தில் விவசாயம் பிரதானமாக உள்ளது. வடக்கு பகுதியில் வசிஷ்ட நதி உள்ளதால் அங்கும் விவசாய நிலங்களே அதிகளவில் உள்ளது.

தெற்கு பகுதியிலும் விளை நிலங்களே அதிகமாக உள்ளது. இதனால்  கிழக்கு பகுதியான விநாயகபுரத்தில் மட்டுமே மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் மட்டுமே குடியிருப்புகள் அதிகளவில் உருவாகிக் கொண்டு வருகிறது. ஆனால் இந்த குடியிருப்புகளுக்கு உரிய அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும் இல்லாத நிலைதான் நீடிக்கிறது. நகராட்சியின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகள் தான். ஆனால் வீட்டுவசதி வாரிய குடியிருப்பின் பெரும்பான்மை பணிகள் முழுமை பெறாமல் இருந்து வருகிறது. இங்குள்ள தெருக்கள் சரியாக இல்லை. அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இல்லை.

செங்கல் உற்பத்தி மற்றும்  விவசாய கருவிகளான டிராக்டர், நெல் அறுவடை இயந்திரங்கள், லாரி பட்டறைகள் என  அதிக அளவில் உள்ளதால் இந்த பகுதியில் இதற்கான தொழில் அமையத்தை ஏற்படுத்திட வேண்டும். அனைத்து வசதிகளுடன் நகராட்சிக்கு தனியாக அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு  கடந்த அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் துவங்கப்படவில்லை. மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சி அந்தஸ்து பெற்றபோதிலும் நகரமன்ற கூட்டம் நடத்துவதற்கு கூட சரியாக இடவசதியின்றி தவிக்கும் நிலையே நீடிக்கிறது. நகராட்சிக்கு எனவும்  பொது உபயோகத்திற்கு  என்றும் ஒதுக்கப்பட்டுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்டெடுக்க வேண்டும். அதனை நகராட்சியின் வருவாய் திட்டங்களுக்கும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு பூங்காகள் உருவாக்கிடவும் நடவடிக்கை எடுக்க  வேண்டும். குடிநீர் விநியோகத்தை முறையாக கணக்கீடு செய்து அனைவருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சீராக தொடர்ந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நகராட்சியின் நுண் உரக்கூடங்களை செம்மைபடுத்தி இயற்கை உரங்கள் தயாரித்து அதனை சுற்றியுள்ள விளை நிலங்களின் பயன்பாட்டிற்கு வழங்கிட வேண்டும். செல்லியம்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிச்சல் விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் அமைப்பதோடு, மினிபேருந்து நிலையமும்  அமைக்க வேண்டும். இது நரசிங்கபுரம் மட்டுமன்றி ஆத்தூர் நகர மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். நரசிங்கபுரம் நகராட்சியினை சுற்றியும் காய்கறி, தக்காளி உற்பத்தி  அதிக அளவில் இருப்பதாலும், குடியிருப்புகள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதாலும் உழவர் சந்தையை ஏற்படுத்திட வேண்டும். அதிக அளவில்  வெற்றிலை, பாக்கு, தென்னை உற்பத்தி உள்ளதால் அதனை மதிப்பு கூட்டும் பொருள் தயாரிக்கும் கூடம்  ஒன்றை வீட்டுவசதி வாரிய பகுதியில் அமைக்க வேண்டும். இதனால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Tags : Narasingapuram Municipality ,Salem ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...