×

கடத்தூரில் திமுக நிர்வாகிகள்

ஆலோசனை கூட்டம்கடத்தூர், பிப்.15: கடத்தூர் பேரூராட்சி திமுக நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மணி தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது: கடத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு, அனைவரும் முழு மூச்சுடன் செயலாற்ற வேண்டும். தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விளக்கியும், தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பயன்பாடு குறித்து எடுத்துக்கூறியும் வாக்கு சேகரிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் அன்பழகன் அமைச்சராக இருந்தும், சொந்த மாவட்டத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வராததை சுட்டிக்காட்டி ஆதரவு திரட்ட வேண்டும். இந்த மாவட்டத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், பொதுமக்களிடமிருந்து 35 ஆயிரம் மனுக்களை பெற்றுள்ளேன்.
அதில், 15 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, வக்கீல் முனிராஜ், முன்னாள் எம்எல்ஏ மனோகரன். ஒன்றிய பொறுப்பாளர் நெப்போலியன், ஜெகநாதன், குபேந்திரன், சிவப்பிரகாசம், பிரகாஷ், கண்ணப்பன், தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Dimugha ,Kathur ,
× RELATED கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்