×

பொன்னை அருகே பரபரப்பு பெண் போலீஸ் வீட்டில் பூட்டு உடைத்து 15 சவரன், ₹1.20 லட்சம் திருட்டு 1 கி.மீ. தூரம் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு


பொன்னை, பிப்.3: பொன்னை அருகே பெண் போலீஸ் வீட்டில் 15 சவரன், ₹1.20 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் மோப்ப நாய் ஓடிச் சென்ற 1 கி.மீ. தூரத்துக்கு இடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த பரமசாத்து பகுதியை சேர்ந்தவர் ஜெனிஷ்குமார்(34), தனியார் ஆயில் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கனகா(27). இவர் திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில், தம்பதி இருவரும் கடந்த 30ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். கனகா தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வரை பணியில் இருந்துள்ளார். இதனால், ஜெனிஷ்குமார் கடந்த 30ம் தேதி வேலை முடிந்ததும் தனது உறவினர் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு, நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து தம்பதியினர் இருவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறக்கப்பட்டு, அதில் இருந்த 15 சவரன் நகைகள், ₹1.20 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கனகா நேற்று முன்தினம் இரவு பொன்னை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மனோன்மணி, எஸ்ஐ பிரகாசம் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்து விட்டு சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலை போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் அங்கு சென்றனர். மேலும், கைரேகை பதிவுகளை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் சிம்மா வரவழைக்கப்பட்டது. அப்போது மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரம் வரை பொன்னை-சித்தூர் நெடுஞ்சாலையில் ஓடிச்சென்றது. பின்னர், பரமசாத்து ஊராட்சிக்குட்பட்ட பெரிய ஊர் பஸ் நிறுத்தத்தில் மோப்பநாய் நின்றுவிட்டது. தொடர்ந்து எஸ்ஐ பிரகாசம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் ஓடிச்சென்ற 1 கி.மீ. தூரத்துக்கு இடைப்பட்ட பகுதிகளிலும், பஸ்நிலையத்திலும் எங்கெங்கு சிசிடிவி கேமராக்கள் உள்ளது என்ற விவரங்களை சேகரித்து ஆய்வு செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெண் போலீஸ் வீட்டில் 15 சவரன், ₹1.20 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Ponnai ,
× RELATED பள்ளி மாணவன் கடத்தலா? போலீசார் விசாரணை