நாகர்கோவில், பிப். 3: கட்டுமான பணிக்கு மாணவிகள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி, எஸ்எல்பி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆதரவற்ற மாணவிகள் காப்பகம் கட்டும்பணி நேற்று தொடங்கியது. நாகர்கோவிலில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி 1949 முதல் செயல்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளியாக இருந்து, பின்னர் மகளிர் உயர்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. தற்போது தொடக்க பள்ளியையும் சேர்த்து 500 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பள்ளியில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளும் கற்பிக்கப்படுகிறது. சுமார் 4 ஏக்கர் 2 சென்ட் பரப்பளவில் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்க அலுவலகம், மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய தண்ணீர் தொட்டி, அரசு அலுவலக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் ஆகியவையும் செயல்படுகின்றன.
தற்போது அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து உள்ளதால் இட நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில், இந்த பள்ளி வளாகத்தில் மாவட்ட சமூகநலத்துறை மற்றும் குழந்தைகள் நலக்குழுமம் இணைந்து T7 கோடி செலவில் ஆதரவற்ற மாணவிகளுக்கான விடுதி கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை கட்டுமானப்பிரிவு செய்து வருகிறது. கட்டுமான பணிக்காக பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் ேதாண்டும் பணி நடந்து வந்தது. நேற்று முன்தினம் பள்ளிகள் திறந்தவுடன் கட்டுமான பணிகளை பார்த்த மாணவ,மாணவிகள், பள்ளி வளாகத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்காக கட்டுமான பணி நடக்கிறது என தகவல் பரவியது. இதனை தொடர்ந்து அங்கு படிக்கும் மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளி கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்டுமான பணி நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்புடன் கட்டுமான பணியை தொடங்க உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கோட்டார் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. போலீஸ் பாதுகாப்புடன் கட்டுமான பணி நடந்து வருவதால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
* தடுப்பு வலையை கிழித்த மாணவர்கள்
ஆரவற்ற மாணவிகளுக்கான விடுதி கட்டுமான பணி தொடங்கியுள்ள நிலையில் பள்ளிக்கும், கட்டுமானப்பணிகள் நடக்கும் இடத்திற்கும் இடையே வலையால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை பணி தொடங்குவதற்கு முன்பு பள்ளிக்கு வந்த சில மாணவர்கள் அந்த தடுப்பு வலையை கிழித்தனர். இதனை பார்த்த போலீசார் மாணவர்களை எச்சரித்தனர். பின்னர் நேற்று மதியமும் மாணவர்கள் அந்த தடுப்பு வலையை கிழித்தனர்.