×

எம்ஐடி, எம்சிசி கல்லூரி விடுதியில் 79 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

தாம்பரம்: குரோம்பேட்டையில் அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவ - மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனை செய்து வந்தனர். அதில், கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 48 மாணவர்கள், 19 மாணவிகள் என மொத்தம் 67 மாணவ -  மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. நோய்த்தொற்று உறுதியான மாணவ - மாணவிகள் உடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், பரிசோதனையில் நோய் தொற்று பாதிப்பு ஏற்படாத மாணவ - மாணவிகள் உடனடியாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதேபோல், தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு கடந்த 3ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நேற்று 8 மாணவிகள் மற்றும் 4 மாணவர்கள் என மொத்தம் 12 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. அவர்கள் கல்லூரி விடுதிகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Corona ,MIT ,MCC College Hostel ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு