×

ஆண்டிமடம் பகுதியில் புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்

ஆண்டிமடம், டிச.30: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், பெரியகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் புதிய கால்நடை மருந்தகக் கட்டிடங்களை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, கால்நடை மருந்தகங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நபார்டு வங்கியின் நிதி உதவி மூலம் ஆண்டிமடம், ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆண்டிமடம் கால்நடை மருந்தகம் பழமையான கட்டிடம் என்பதால் 40 ரூ.34.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், பெரியகிருஷ்ணாபுரம் மற்றும் இடைக்கட்டு கிராமங்களில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கால்நடை மருந்தகங்கள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் திறந்து வைத்தார். விழாவின்போது சிறப்பாக கறவை பசுக்களை பராமரித்தவர்களுக்கு பால் கலன்களை வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தில் இந்த வருடத்தில் மொத்தம் 120 சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது. எனவே, உங்களை உங்களின் வீடு தேடி வரும் இந்த சிறப்பு கால்நடை மருத்துவ முகாமிற்கு அனைத்து விவசாயப் பெருமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் சூனாபுரி, விளந்தை, பெரிய கிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், காடுவெட்டி ஆகிய பகுதிகளில் ரூ.37 லட்சத்து 39 ஆயிரத்து 830 மதிப்பில் புதிய மின் மாற்றிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் இணை இயக்குநர் (கால்நடைபராமரிப்புத்துறை) ஹமீதுஅலி, செயற்பொறியாளர் (இயக்குதலும், காத்தலும்) செல்வராஜ், ஆண்டிமடம் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Andimadam ,
× RELATED அரியலூர் அருகே போட்டோவில் இருந்த தாலியை திருடியவர் கைது