ஈரோடு, டிச. 23: சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழாவில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கட்சியினர் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து பங்கேற்க வேண்டும்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 24ம் தேதி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற உள்ளது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் ஒளி விருதும், நெல்லை கண்ணனுக்கு காமராசர் கதிர் விருதும் உள்ளிட்ட 6 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து பங்குபெறும் நிர்வாகிகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுரைப்படி அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.