பவானி, டிச. 22: சித்தோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் அடிக்கடி வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள், பைக்கில் செல்வோரிடம் பணம், நகைப்பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இது குறித்து, சித்தோடு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நசியனூர் பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே சந்தேகப்படும்படி வந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு, தோப்படி தெருவைச் சேர்ந்த ரவி மகன் சுரேந்திரன் (27) என்பதும், சித்தோடு பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதும் தெரியவந்தது. இவர், சித்தோடு நடுப்பாளையம், ஆர்.என்.புதூர் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகளைத் கொள்ளையடித்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து நகையை மீட்ட போலீசார் சுரேந்திரனை கைது செய்தனர்.