×

திருவாரூரில் மார்ச் 15ல் ஆழி தேரோட்டம் கமலாலய குளத்தின் மதில் சுவரை விரைந்து சீரமைக்க அறிவுறுத்தல் மீண்டும் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருவாரூர், டிச. 21: திருவாரூர் மார்ச் 15ம் தேதி ஆழி தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் கமலாலய குளத்தின் மதில் சுவரை சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மீண்டும் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு கூறினார். திருவாரூரில் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி அதிகாலை கனமழையின் காரணமாக கமலாலய குளத்தின் தெற்கு புறத்தில் நகராட்சி அலுவலகம் எதிரே 101 அடி நீளத்திற்கு மதில் சுவர் திடீரென்று இடிந்து குளத்திற்குள் விழுந்தது. இதனையடுத்து மறுநாள் 26ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இடிந்த மதில் சுவரை நேரில் பார்வையிட்டு குளத்தின் நான்கு புறங்களிலும் இருந்து வரும் மதில் சுவரினை பழமை மாறாமல் புதுப்பித்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் பொறியாளர்கள் கடந்த மாதம் இந்த குளத்தின் மதில் சுவர்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து நேற்று காலை ரயில் மூலம் திருவாரூர் வருகை தந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தியாகராஜ சுவாமி கோயிலில் சாமி தரிசனத்திற்கு பின்னர் அங்கு இருந்து வரும் சிலைகள் பாதுகாப்பு மையம் மற்றும் கோயிலில் நந்தவனம் உட்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். மேலும் கமலாலயக் குளத்தின் மதில் சுவரையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கமலாலய மதில் சுவர் சீரமைப்பு மற்றும் ஆழித் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், அறநிலையத்துறை அரசு செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், எஸ்பி விஜயகுமார், அறிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் ஹரிஹரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது, கமலாலய தெப்பக்குளத்தில் மழையின் காரணமாக இடிந்த பகுதி ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் 148 அடி நீளத்திற்கு கட்டுவதற்கு துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆழித் தேரோட்ட விழா கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட்டுள்ள நிலையில் அதேபோன்று நடப்பாண்டிலும் இந்த ஆழித் தேரோட்டத்தினை ஆயில்ய நட்சத்திரத்தில் வரும் மார்ச் 15ம் தேதி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதால் அதற்குள் கமலாலயக் குளத்தின் மதில்சுவர் சீரமைக்கப்பட வேண்டும் என்பதால் அதற்குரிய பணிகளை அலுவலர்கள் விரைந்து செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முன்னதாக திருவாரூர் ஒன்றியம் திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோவில் மற்றும் குளம், தேர் ஆகியவற்றினையும் அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags : Minister ,Sekarbabu ,Thiruvarur ,Azhi Therottam Kamalalaya pond ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...