×

பவுர்ணமி கிரிவலம் செல்ல மீண்டும் தடை திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, டிச.17: திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயிலை தரிசிக்கவும், 14 கி.மீ தூரம் மலைச்சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லவும், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்ததான நாளை 18ம் தேதி காலை 8.15 மணி முதல், 19ம் தேதி காலை 10.22 மணி வரை, திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல அனுமதி கிடையாது. எனவே, திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் வர பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் கட்டுபடுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Pavurnami ,Kiriwalam ,Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...