×

இந்த நாள் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற கடைசி வாய்ப்பு

திண்டுக்கல், டிச. 6: திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொது தேர்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்கள் கடைசி வாய்ப்பாக பெற்று கொள்ளலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளாத தனித்தேர்வர்களின் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்கள்  திண்டுக்கல் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீள பெறப்பட்டுள்ளன. எனவே கடந்த 204 ஆண்டு முதல் 208 ஆண்டு வரை உள்ள  பருவங்களுக்குரிய பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மேற்காண் தேர்வுக்கு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிய தேர்வரால்  பெறப்படாமலிருக்கும் பள்ளி மாற்று சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் இருப்பில் உள்ளது.

தேர்வுத்துறை விதிமுறைகளின்படி தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டு 2 வருடங்கள் கழித்து தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண்  சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். எனவே மேலே குறிப்பிட்ட  பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள் இந்த செய்தி  அறிவிப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து 30 நாட்களுக்குள் நேரில் அணுகியோ அல்லது ரூ.45 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட  உறையுடன் தேர்வரின் கையொப்பமிடப்பட்ட கோரிக்கை கடிதம், தேர்வரின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு,

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகல் இணைத்து  ‘உதவி இயக்குநர், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், (மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகம்), பழநி ரோடு, திண்டுக்கல்’ என்ற  முகவரிக்கு அனுப்பியோ உரிய மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட பருவங்களுக்குரிய தனித்தேர்வர்களால் கோரப்படாத மதிப்பெண்  சான்றிதழ்களை பெற இதுவே இறுதி வாய்ப்பாகும். தவறினால் மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு இவ்வலுவலகத்தால் உரிய  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்தார்.   

Tags :
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...