ஈரோடு, டிச. 14: ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. மனு கொடுக்க வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி திடீரென்று தீ குளிப்பு சம்பவங்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த வாரம் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த சலவை தொழிலாளி திடீரென்று மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கடந்த வாரம் தீ குளிக்க மண்எண்ணெய் கொண்டு வந்ததாக 2 பேரை போலீசார் கண்டுபிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் ஈரோடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார், தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். நுழைவு வாயில் பகுதியில் பொதுமக்களை தடுத்து நிறுத்திய போலீசார் தண்ணீர் பாட்டில், கைப்பை உள்ளிட்டவைகளை சோதனை செய்த பிறகு மண்எண்ணெய் பெட்ரோல் உள்ளிட்டவைகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு உள்ளே செல்ல அனுமதித்தினர். மேலும் நுழைவு வாயில் பகுதியில் தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள், தண்ணீர் குடங்கள் ஆகியவற்றை முன்னெச்சரிக்கையாக வைத்திருந்தனர்.