திருப்பூர், டிச.13: திருப்பூர் தடகள சங்க தலைவர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக தடகள சங்கம் சார்பில் 35வது மாநில இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் 100 வீரர்கள், 70 வீராங்கனைகள் என திருப்பூர் தடகள சங்கம் சார்பில் 170 பேர் கலந்து கொண்டனர்.
14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்டோர் என 4 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக போட்டி நடைபெற்றது.
போட்டி நிறைவில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் 4 தங்கம். 6 வெள்ளி. 2 வெண்கலம் என மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் அனைவரும் அடுத்ததாக தென்னிந்திய அளவில் நடைபெறவுள்ள தடகள போட்டிக்கு தமிழகத்தின் சார்பில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகள், அவர்களது பயிற்சியாளர்கள், ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.