திருமங்கலம், டிச.11: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கப்பலூர் சிட்கோவில் பொதுமக்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு நலத்திட்ட உதவிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மதுரை திருமங்கலம் அடுத்துள்ள கப்பலூர் சிட்கோவில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். கப்பலூர் மற்றும் உச்சப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து தொழில்அதிபர் சங்ககூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மஸ்தான், `` சென்னை அம்பத்தூருக்கு அடுத்தபடியாக பெரிய சிட்கோ கப்பலூர் அமைந்துள்ளது. உங்களது கோரிக்கைகளை முதல்வரிடம் ஓரிரு நாள்களில் கொண்டு போய் சேர்ப்பேன். சிறுபான்மை நலன்காக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது. தற்போது திண்டிவனம் - செய்யாறு இடையே தொழில்பேட்டை அமைக்கும்பணிகள் துவங்கியுள்ளன. இது போல் உங்கள் கோரிக்கைகளையும் முதல்வர் உடனடியாக நிறைவேற்றுவார் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிட்கோ தலைவர் ரகுநாதராஜா, செயலாளர் வாசுதேவன், பொருளாளர் இளங்கீரன், திமுக நிர்வாகிகள் முத்துராமன், சிவமுருகன், மதன்குமார், கப்பலூர் சந்திரன், புவனேஸ்வரி ராஜசேகர், திருமங்கலம் கீழபள்ளிவாசல் தலைவர் அப்துல்ஹமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.