×

என்எல்சி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ₹2 லட்சம் மோசடி

நெய்வேலி, டிச. 9: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். வடலூர் அருகே உள்ள கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி மோட்சராணி(53). இவர் அதே பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி(66). இவர் தற்போது வடலூர் கல்லுக்குழி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி மோட்சராணியின் கடைக்கு வந்து செல்வது வழக்கம்.

அப்போது மோட்சராணியின் மகனுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஒரு வருடம் முன்பு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து கேட்டதற்கு சரியான பதில் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து மோட்சராணி, வடலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுசாமி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது இரண்டாவது மனைவி வனிதா(36) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், வடலூரை  சேர்ந்த மனோகரி(35), சந்தோஷ்குமார் ஆகியோரிடமும் தலா ரூ.50 ஆயிரம் பணம் வாங்கி கொண்டு, வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் இப்பகுதியில் பலரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து வடலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : NLC ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...