×

ஸ்ரீவைகுண்டம் தென்கால் மடை பாலத்தில் ஓட்டை வாகன ஓட்டிகள் அச்சம்

ஸ்ரீவைகுண்டம், டிச.4: ஸ்ரீவைகுண்டம் தென்கால் வாய்க்கால் மடை பாலத்தில் திடீரென ஓட்டை விழுந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்குடி மேலூர் தென்கால் வாய்க்கால் கரையோரம் வெள்ளூர் குளத்துப் பாசன வடிகால் மடை உள்ளது. இந்த பாசன மடை பாலம் கடந்த வாரம் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சேதமடைந்தது. வெள்ளூர் குளத்திலிருந்து தண்ணீர் மறுகால் பாய்ந்து வடிகால் வழியாக தென்கால் வாய்க்காலில் அதிகளவு வருவதால் மடை மேலும் சேதமடைந்து வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்தையும் புதுக்குடி மேலூர், கீழுர் பகுதிகளையும் இணைக்கும் இந்த சாலையில் உள்ள வடிகால் பாசன மடை பாலம் சேதமடைந்ததால் பொதுமக்களும், விவசாயிகளும், வாகன ஓட்டிகளும் ஒருவித அச்சத்துடனேயே பாலத்தை கடந்து செல்கின்றனர். மேலும் இந்த வழியாகதான் பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த வாகனங்களும், வாழைத்தார் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும் வந்து செல்கின்றன. சேதமடைந்த மடையை உடனே சரி செய்யாவிட்டால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரியாத நிலையில் இருசக்கர வாகனத்தில் வருவோருக்கும் பாதிக்கபடும் சூழ்நிலை உள்ளது.

மடை பழுதடைந்தது குறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சேதமடைந்துள்ள மடையை உடனடியாக சரி செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Srivaikuntam ,Tenkal Mada bridge ,
× RELATED ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளத்தால்...